திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை வெகுவிரைவில் இலங்கை வசமாக்குவதாக சக்தி வலு அமைச்சர் குறிப்பிட்ட கருத்துக்கும் இந்திய உயர்ஸதானிகர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன என கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவை சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித குறிப்பிட்டார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கி விவகாரம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “திருகோணமலை துறைமுகத்துக்கு சொந்தமான காணியில் 99 எண்ணெய் தாங்கிகள் காணப்படுகின்றன. இவற்றில் 15 தாங்கிகள் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் வசம் உள்ளது. மிகுதி 84 தாங்கிகள் ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது .
செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த அடிப்படையில் 2035ஆம் ஆண்டு காலப்பகுதியில் எண்ணெய் தாங்கிகள் இலங்கை வசமாக வேண்டும். இதனால் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்திய நிறுவனத்தினால் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு அபிவிருத்தி செய்யப்படவில்லை.
கனிய வள கூட்டுத்தாபனம் இரண்டு அரச வங்கிகளுக்கு 600 பில்லியன் கடன் செலுத்த வேண்டும். அத்துடன் வெளிநாட்டு கடன் 1500 மில்லியன் காணப்படுகிறது. கூட்டுத்தாபனம் இரண்டு அரச வங்கிகளுக்கும் வட்டி செலுத்த வேண்டும். இவ்வாறான நெருக்கடியில் பிற நிறுவனங்களிடமிருந்து கடன் பெற முடியாத நிலை கூட்டுத்தாபனத்துக்கு காணப்படுகிறது.
நட்டமடைந்துள்ள கனிய வள கூட்டுத்தாபனம் திருகோணமலை எண்ணெய் தாங்கியை முழுமையாக அபிவிருத்தி செய்யும் என்று அரசாங்கம் குறிப்பிடுவது நகைப்புக்குரிய விடயமாகும்.
திருகோணமலை எண்ணெய் தாங்கி தொடர்பில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2035ஆம் ஆண்டுடன் முடிவடையும்.
இவ்வாறான நிலையில் தற்போது வெகுவிரைவில் தாங்கிகள் இலங்கை வசமாகும் என்று குறிப்பிடுவது மக்களின் அரசியல் சிந்தனையை திசைத்திருப்பும் செயற்பாடு என்று குறிப்பிட வேண்டும்.
எண்ணெய் தாங்கி குறித்து சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்ட கருத்துக்கும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் குறிப்பிட்ட கருத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுப்பாடு காணப்படுகிறது.
எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பேச்சவார்த்தை மாத்திரம் இடம் பெற்றுள்ளது என்றே இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இவ்விடயத்தின் உண்மை தன்மையினை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றார்.