நாட்டில் இன்று ஏற்பட்ட மின் தடை போன்று எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருக்கும் வகையில் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைச்சர் டலஸ் அழகப்பெரும குழு ஒன்றினை நியமிப்பார் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும் ஒவ்வொரு மின் நிலையத்தையும் கைமுறையாக மீண்டும் செயற்படுத்த வேண்டியிருப்பதால் மின் விநியோகத்தை மீட்டெடுக்க இன்னும் அதிக நேரம் எடுக்கும் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அத்தோடு மின்சாரம் வழங்கல் ஒரு சவாலான பணியாக இருப்பதால், இன்று இரவு 8 மணியளவில் நாடு முழுவதும் முழுமையாக மின்சாரத்தை வழங்க முடியும் என்றும் இலங்கை மின்சார சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இன்னும் சில மணி நேரத்தில் நாடு முழுவதும் மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்தோடு நிலைமையை ஆய்வு செய்வதற்கும் மின் விநியோகம் தடைபடுவதற்கான காரணத்தை கண்டறியவும் ஒரு குழுவை நியமிக்க அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த குழு இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அமைச்சருக்கு அறிக்கை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.