வியட்நாமில் 12-வது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமியை டெலிவரி பாய் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுமியை காப்பாற்றிய நபரை அனைவரும் ரியல் ஹீரோ நீங்கள் தான் என்று பாராட்டி வருகின்றனர்.
பாம்பு கடித்து பிழைத்தவனும் உண்டு, புழு கடித்து இறந்தவனும் உண்டு என்ற பழமொழியை உண்மையாக்கி உள்ளது வியட்நாமில் நடைபெற்ற சம்பவம் ஒன்று. 12-வது மாடியிலிருந்து, அதுவும் 164 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த சிறுமி ஒருவர் உயிர்பிழைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
வியட்நாமில் நுயேன் என்ற 31 வயது இளைஞர் ஒருவர் அப்பார்ட்மென்ட் ஒன்றில் பார்சலை டெலிவரி செய்வதற்காக வேனில் காத்து இருந்துள்ளார். அப்போது அப்பார்ட்மென்டின் 12-வது மாடியின் பால்கனியில் சிறுமி ஒருவர் அழும் சத்தம் கேட்டுள்ளது. அங்கே ஒரு சிறுமி ஒரு கையால் பால்கனியின் விழிம்பை பிடித்து தொங்கி கொண்டிருப்பதை பார்த்து மிரண்டு போய் உள்ளார்.
சட்டென்று சிறுமியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய நுயேன் சிறுமி கீழே விழுந்தால் அவரை பிடிக்க ஆயுத்தமாகி உள்ளார். அந்த சிறுமியும் 12-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த சமயத்தில் கீழே காத்திருந்த அவர் தக்க தருணத்தில் சிறுமியை பிடித்து மீட்டுள்ளார். 164 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய மகிழ்ச்சியில் இருந்த இளைஞர், அந்த சிறுமிக்கு வாயில் ரத்தம் வருவததை பார்த்து அவரை சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
சிறுமி 12-வது மாடியில் இருந்து தவறி விழுவதும் அந்த இளைஞர் காப்பாற்றும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிறுமியை சரியான தருணத்தில் காப்பாற்றி நுயோனுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சிறுமியை காப்பாற்றியதற்கு பிறகு தனது வாழ்க்கையே மாறிவிட்டதாக நுயோன் தெரிவித்துள்ளார். ஆன்லைனில் பலர் தன்னை பாராட்டி வருவதாகாவும் ஒரே நாளில் என் வாழ்க்கைமுறை தலைகீழாக மாறிவிட்டது என்றும் கூறியுள்ளார்.