நடிகர் விக்ரமுக்கு ரசிகர் மன்றம் அமைப்பதில், ஏற்பட்ட மோதலால் கபடி வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தமிழகம் நாமக்கல் அருகே கடந்த 2017-ம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
நாமக்கல் அடுத்த தூசூரை சேர்ந்த மணிகண்டன் தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்றவர். நடிகர் விக்ரமின் தீவிர ரசிகரான இவர் தூசூர் பகுதியில் விக்ரம் ரசிகர் மன்றம் நிறுவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கு அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இருவருக்குமிடையே பிரச்சனை நிலவி வந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி ஊரிலுள்ள மாரியம்மன் கோவில் முன்பு, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மணிகண்டனை, ராமச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்தனர் இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் கொலையில் தொடர்புடைய 7 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட சகோதரர்களான ராமச்சந்திரன், ரகுராமன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.