கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் வீடுகள், மலசல கூடங்கள் அமைக்கும் வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிதி வழங்கும் நிகழ்வு, ஏறாவூரில் எதிர்வரும் செவ்வாய்கிழமை (10) நடைபெறவுள்ளதாக, அதிகார சபையின் பொது முகாமையாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளரும் முன்னாள் மாகாண அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் ஏறாவூர் நகர பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளதாக கிழக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபேகுணவர்த்தன, பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் 28 பேருக்கு வீடுகள் அமைப்பதற்கான முதல்கட்ட நிதியும், 120 பேருக்கான மலசல கூடங்கள் அமைப்பதற்கான நிதியுமாக 3.6 மில்லியன் ரூபாய்கான காசோலைகள் வழங்கப்படவுள்ளதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.