திருகோணமலை-ஹொரவபொத்தானை பிரதான வீதி திரியாய் சந்தி மற்றும் நொச்சிகுளம் போன்ற பகுதிகளில் இன்று (08) அதிகாலை இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திரியாய் சந்தியில் சென்ற காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பிரதான மின் கம்பம் இரண்டை உடைத்துக்கொண்டு சென்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நொச்சிக்குளம் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்றின் சாரதிக்கு தூக்கம் சென்றமையால் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இந்த மாதத்தில் மாத்திரம் 13 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதிக அளவிலான விபத்துக்கள் வேகக்கட்டுப்பாட்டை மீறி சென்றமையினாலேயே இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.