அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் வகையில், நாடுகளுடனான எல்லைகளைத் திறப்பதற்கான சாத்தியங்கள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுற்றுலாத்துறை மற்றும் பல்வேறு விமான நிறுவனங்கள் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பாரிய அளவில் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் வகையில் எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் விதிக்கப்பட்ட பயணத் தடையின் போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படவில்லை எனக் கூறியுள்ள அமைச்சர், மாறாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்கப்பட்ட செயன்முறையானது தற்போது விரிவுபடுத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் சுற்றுலாத் துறையுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஊக்குவிப்பு அடிப்படையிலான திட்டங்களை செயற்படுத்துவது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. “ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்” போன்ற பொதிகளை வழங்குவது குறித்து விமான சேவை நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும் அதேவேளையில், பயணிகளுக்கு மேலதிக வசதிகளை வழங்குவது குறித்து ஹோட்டல்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான ஊக்குவிப்புத் திட்டங்களை வழங்குவது குறித்து ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள தூதரகங்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத இறுதிக்குள் கலந்துரையாடல்களை நிறைவு செய்து, திட்டங்களை உடனடியாக செயற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.