யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக முன்றலில் இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து பெயர்ப்பட்டியல் அனுப்பப்பட்டது.
அந்த பட்டியலில் அரசியல்வாதிகளின் சிபாரிசுகளினால் வந்தவர்களே உள்ளதாகவும் அதனை ஏற்க முடியாது என தெரிவித்தே பல்கலை ஊழியர்கள் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமக்கான நீதி கிடைக்கும் வரையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் இனியும் தாமதிக்காது சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.