இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர் ஒருவருக்கு முஸ்லீம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
அவ்வாறு மக்கள் வாக்களிக்கும் போது 3 அல்லது 4 இலட்சம் வாக்குகள் பெரும்பாண்மை கட்சிகளை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்கும் என தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “முஸ்லிம் சமூகத்தில் ஒரு வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும். அவர் இலங்கையில் சகல முஸ்லிம் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும். எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த மதத்தை சேர்ந்த ஒருவர் தான் போட்டியிடுகின்றார்.
எனவே முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த கூடியவர் யார் என்றும் நாட்டை நல்லிணக்கத்துடன் கொண்டு சொல்லக்கூடியவர் யார் என்ற விடயங்களை அறிந்து, நாட்டு மக்கள் விரும்பும் வேட்பாளருடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு இந்த தேர்தலில் முஸ்லிம்கள் களமிறங்க வேண்டும்.
அத்தோடு சமூகம் சார்ந்து போட்டியிடும் அந்த வேட்பாளர் ஒப்பந்தம் செய்துகொண்ட பெரும்பாண்மை வேட்பாளருக்கு முதல் வாக்கினையும் இரண்டாவது வாக்கினை தனக்கும் அளிக்குமாறு கோரி பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்” என முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா கூறினார்.
அத்துடன், இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகளினாலேயே மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.