மதச்சுதந்திரம் மற்றும் நம்பிக்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் தொடர்பாளர் அஹமட் சஹீட், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நாடாளுமன்றத்திலுள்ள எதிர்கட்சித் தலைவருடைய அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இலங்கையில் மதங்களுக்கு இடையேயும் மக்களுக்கு இடையேயும் சிறந்த நல்லிணக்கம் காணப்படுவதாக ஐ.நா அதிகாரி இச்சந்திப்பின்போது கூறியுள்ளார்.
ஆசிய வலயத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மதச்சுதந்திரம் சிறந்து விளங்குவதாக ஐ.நா தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்றிருந்தபோது அங்கு கடந்த ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்திப் பணிகள் குறித்து இந்த சந்திப்பின்போது குறித்த அதிகாரி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக அப்பிரதேச மக்கள் அதனை சந்தோசத்துடன் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, இனங்களுக்கு இடையே நம்பிக்கை கட்டியெழுப்ப முடியாவிட்டால் நாடு என்ற வகையில் முன்நோக்கி நகர்ந்து செல்லமுடியாது என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, தினேஷ் குணவர்தன உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.