அமைச்சர் மங்களசமரவீரவின் கருத்துக்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நோக்கில் அமைந்துள்ளதாக நாமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மஹிந்த ராஸபக்ஷவின் இந்த தீ்மானத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலர் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
இந் நிலையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, “காட்டுமிராண்டிகள் நுழைவாயிலில் உள்ளார்கள். வெள்ளைவான் கலாசாரத்தை பிரதானமாகக்கொண்ட ராஜபக்ஷ யுகத்தின் முக்கிய அடையாளமான ‘அருவருக்கத்தக்க அமெரிக்கர்’ ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பிக்கிறார். அந்தத் தனிமைப்படுத்தப்பட்ட, இருண்ட இறந்தகாலத்திற்குள் இலங்கையர்கள் மீண்டும் நுழைய வேண்டுமா?” என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்த ட்விட்டர் பதிவை மேற்கோள்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் நாமல் ராஜபக்ஷ தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “அரசியலைப் பொறுத்தவரையில் விமர்சனங்கள் அதன் ஓரங்கம் என்ற போதிலும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நோக்கிலும் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை கவலையளிக்கின்றன” எனஅவர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.