ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் எனக் கூறப்படுகிறது. இதில் பங்கேற்கவுள்ள 8 அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் தனது பெயரை பஞ்சாப் கிங்ஸ் என மாற்றியுள்ளது.
ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் சில
மாதங்களே உள்ள நிலையில் பஞ்சாப் அணிக்கு ஏன் திடீரென்று பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பது
குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிசிசிஐ மூத்த
நிர்வாகி ஒருவர், “பெயரை மாற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நீண்ட காலமாகத் திட்டமிட்டிருந்தது.
ஐபிஎல் 14ஆவது சீசனுக்கு முன்பு அறிவிக்க வேண்டும் எனக் காத்திருந்தார்கள். எனவே இது
திடீர் முடிவு அல்ல” எனத் தெரிவித்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2008ஆம்
ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறது. ஒரேயொரு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி
கோப்பையை தவறவிட்டது. ஒருமுறை மூன்றாவது இடம் வரை முன்னேறியது. இந்த சோகப்பயணம் இனிமேலும்
தொடரக் கூடாது என்பதற்காகப் புத்தம் புதுப் பொழிவுடன் அணி களமிறங்க முடிவு செய்துள்ளதாகக்
கூறப்படுகிறது.
பஞ்சாப் அணியிலிருந்து பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், 53.2 கோடி கையிருப்பில் உள்ளது. இதனைக் கொண்டு திறமையான வீரர்களை அணிக்குள்
இழுத்து இம்முறை கோப்பை வெல்ல கடும் முயற்சிகளை மேற்கொள்வார் என்பது உறுதி என கிரிக்கெட்
விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர்கள்: மோஹித் பர்மன், நெஸ் வாடியா, பிரீத்தி ஜிந்தா, கரண் பால்.