பலாலி விமான நிலையத்தின் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதிக்குள் சேவைகளை ஆரம்பிக்க முடியுமென அவர் கூறியுள்ளார்.
பயணிகள் விமானங்களை இயக்குவதற்கு ஏற்றவாறு, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலைய முனையக் கட்டடம், விமான தரிப்பிடத் தொகுதி, கட்டுப்பாட்டுக் கோபுரம் மற்றும் விமான ஒடுதளம் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
80 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய விமானங்களை இயக்கும் வகையில் இந்த விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் பிரியந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.
இது பிராந்திய விமான நிலையமாக பயன்படுத்தப்படும் என்பதோடு, ஒக்டோபர் நடுப்பகுதியில் இந்த விமான நிலையம் பயணிகள் போக்குவரத்துக்கு தயாராகி விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்