பாகிஸ்தான் மேற்கொள்ளும் இராணுவ மோதலுக்கு தயாராகவுள்ளோம் என இந்தியா தெரிவித்துள்ளது.
மும்பையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இந்திய விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பாகிஸ்தானுடன் இராணுவ மோதலுக்கு தயாராக இருக்கிறோம். மோதலை தொடங்குவது பற்றி அரசியல் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.
நான் 2017ஆம் ஆண்டு விமானப்படை தளபதியாக பொறுப்பேற்றபோது, எனது கீழ்நிலை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினேன். அதில், நமது எதிரி போர் புரிய முடிவெடுத்தால், குறுகிய இடைவெளியில் போருக்கு தயாராக வேண்டும் என்று எழுதி இருந்தேன்.
இருந்தாலும், பாகிஸ்தான் மக்களை கவரவே அந்நாட்டு தலைவர்கள் அப்படி பேசி வருகிறார்கள். பாகிஸ்தானின் போர்த்திறன் எப்படிப்பட்டது என்று நமக்கு தெரியும். இது இருமுனை போராக இருக்காது.
நம்மிடம், சுகோய்30 ரக விமானங்களும், பிரமோஸ் சூப்பர்சானிக் குரூஸ் ஏவுகணைகளும் உள்ளன. அவற்றுக்கு பாகிஸ்தானால் பதில் சொல்ல முடியாது.
கார்கிலில் அஜய் அகுஜா என்ற விமானியை நாம் இழந்தோம். அவர் விமானத்தில் இருந்து குதித்தபோது, பாகிஸ்தான் பகுதியில் விழுந்தார். அங்கு சுடப்பட்டார். பிறகு அவர் திரும்பி வரவில்லை.
ஆனால், அபிநந்தனை மீட்டு வந்து விடலாம்
என்று அவருடைய தந்தையிடம் நான்
கூறினேன். அதுபோல், குறுகிய இடைவெளியில்
அவர் மீண்டு வந்தார்.
அதற்கு நமது தேசிய தலைமைதான்
காரணம். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவர் காட்டிய மனஉறுதி
பாராட்டத்தக்கது.
அபிநந்தன், பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய படம் கையில் கிடைக்கவில்லை. ரேடார் புகைப்படத்தையே காட்ட முடிந்தது. ரபேல் போர் விமானம் வந்த பிறகு, விமானப்படையின் வலிமையில் பெரும் மாற்றம் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.