சவுதி அரேபியாவிற்கு சொந்தமான அரம்கோ மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது இன்று(சனிக்கிழமை) ஆளில்லா விமானம் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தலைநகர் ரியாத்தின் வடகிழக்கில் சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புக்கியாக் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பிரமாண்ட மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆலையில் நாளொன்றுக்கு சுமார் 70 இலட்சம் பீப்பாய்கள் மசகு என்ணெய் சுத்திகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறதுடன், குறித்த ஆலையில் தாக்குதல் நடத்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏமனில் செயல்படும் ஹவுதி தீவிரவாதிகள் உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டிருந்தமையை தொடர்ந்து, இந்த ஆலையை சுற்றி கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த ஆலை மீது ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தை கொண்டு வான்வழித் தாக்குதல் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலினால் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் தீ பற்றி எரிந்த போதிலும் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேவெளை, இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தீவிரவாத தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.