நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி என்பனவற்றை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த திங்கட்கிழமை நியமிக்கப்பட்டார்.
அவரது நியமனத்திற்கு பல்வேறு சர்வதேச நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையிலேயே புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தாய் நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றை ஆட்சி என்பனவற்றை பாதுகாப்பதற்காக இராணுவத்திற்கு தலைமைத்துவம் அளிப்பதை தமது பிரதான பணியாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரஜைகளின் சுதந்திரத்தை பாதுகாப்பது சுதந்திரமான ஜனநாயகத்துடன் கூடிய சூழலை உருவாக்குவது என்பன பிரதான பொறுப்புக்களாகும். உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியிலான அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் செயற்படுவது அவசியமாகும்.
அனைத்து இனத்தவர்களையும் ஒரு தாய் மக்களாகக் கருதி, சகவாழ்வு, நல்லிணக்கம், சனோதரத்துவம் என்பனவற்றுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியமாகும் எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது, அதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது தமது இரண்டாவது பணியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைவரது நலனுக்காகவும் செயற்பட்டு இராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலனுக்காக தேவைகளை பூர்த்தி செய்வது தமது மூன்றாவது இலக்காகும் எனவும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.