லிபியாவில் நடுக்கடலில் சிக்கித்தவித்த 100 இற்கும் மேற்பட்ட அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லிபியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களிடம் இருந்து தப்பித்து தமது உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக கடலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதனால் பல்வேறு விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன்காரணமாக லிபிய கடற்படையினர் தங்கள் கடல் எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், லிபியாவின் கிழக்கு பகுதியில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட வீரோதமாக செல்ல முயன்ற 100 அகதிகளை உள்நாட்டு கடற்படையினர் நடுக்கடலில் மீட்டுள்ளனர்.
இந்த தகவலை இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.