காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று நடத்தப்பட்ட விஷேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
1453 நாட்களுக்கு மேலாக குறித்த போராட்டமானது திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரை காலமும் எந்தவிதமான தீர்வும் அதற்கு எட்டப்படாத போது ஜனாதிபதி இந்த கருத்தினை தெரிவித்திருப்பது தமக்கு ஆறுதல் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாவட்ட ரீதியாக காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளை சந்திப்பாரா? அல்லது ஒட்டுமொத்தமாக ஒரு கூட்டத் தொடரின்போது சந்திப்பாரா என்பது குறித்து தாம் ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தின் பின்னராவது தமது பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் தாம் இருப்பதாகவும் இதற்கு நல்லதோர் பொறிமுறையை ஜனாதிபதி முன்னெடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் மாவட்ட தலைவி ஆஷா குறிப்பிட்டார்.
(source : IBC Tamil)
