திருமலை புல்மோட்டை- கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் கடற்படையினரின் தாக்குதலினால் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு மீனவர்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்வதற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தாக்குதலுக்குள்ளான நான்கு மீனவர்களின் வைத்திய அறிக்கைகளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது கடற்படையினர் தாக்கியதாக 4 மீனவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் வைத்திய சாலைக்குச் சென்று நோயாளர்களை பார்வையிட்டபோதே திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா, இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
சட்டவிரோதமான மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் கடற்படை உத்தியோகத்தர்களின் சமிக்கைகளை பொருட்படுத்தாமல் தப்பியோட முற்பட்டமை தொடர்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக இன்றைய தினம் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதேவேளை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட புல்மோட்டை – நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த குறித்த 4 மீனவர்களையும் பொல்லால் தாக்கியதுடன் துப்பாக்கி சூடு வைத்ததாக தெரிவிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் அவர்களை திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம் எச் எம் ஹம்ஸா நேரில் சென்று பார்வையிட்டதுடன் நடந்த சம்பவத்தையும் கேட்டறிந்தார்.
இதனையடுத்து தங்களை கடற்படையினர் பொல்லால் அடித்து தாக்கியதாகவும் சக நண்பர் ஒருவருக்கு துப்பாக்கியால் சுட்டதுடன் அவருடைய வலது காலில் காயம் ஏற்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தபோது வாட்டில் (களம்) கடமையாற்றும் கடமை நேர வைத்தியரிடம் வினவியதுடன் அவருடைய வலது காலில் காயத்துக்கு மேல் இரும்பு துண்டு காணப்படுவதாகவும் அதனை சத்திரசிகிச்சை மூலம் அகற்ற உள்ளதாகும் நீதவானிடம் வைத்தியர் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதவான் தாக்குதலுக்குள்ளான நான்கு மீனவர்களின் வைத்திய அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய நிபுணருக்கு அறிவுறுத்தல் வழங்குமாறும் துறைமுக பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
தாக்குதல் தொடர்பில் திருகோணமலை துறைமுக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளான 4 மீனவர்களும் தொடர்ந்தும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.