வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை, முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் பதவி நீக்கம் செய்த முறை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர், புதிய அமைச்சர் நியமிக்கப்பட்ட விதமும் சட்டவிரோதாமானது என அறிவித்துள்ளனர்.
இதற்கமைய இந்த வழக்கிற்கான செலவை மனுதாரரான பா.டெனீஸ்வரனுக்கு செலுத்துமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வட மாகாணத்தின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தன்னை பதவி நீக்கியமை சட்டத்திற்கு புறம்பானது என உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறைவேற்ற தவறியதால் நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை செப்டம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கும் தீ்ர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் கருத்து தெரிவித்த சி.வி விக்கினேஸ்வரன், நீதிமன்றின் தீர்ப்பின்மூலம் 13 ஆவது திருத்தச்சட்டம் எவ்வளவு தூரத்திற்கு வலுவற்றது என்பதை மக்களுக்கு புரிந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”நீதியரசர்கள் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லை போல் தெரிகின்றது. அதாவது, டெனிஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்குவதாகக் கூறி அனுப்பிய எழுத்திலான கடிதம் ஆளுநரிடம் சேர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
முன்னைய அமைச்சரை நீக்குவதாக அவருக்கு அறிவிக்கப்பட்டும் ஏன் அதனை ஆளுநர் வர்த்தமானியில் பிரசுரிக்கவில்லை என்ற கேள்வியை நீதியரசர்கள் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்துப் பற்றி நீதியரசர்கள் ஆராய்ந்திருக்கத் தேவையில்லை.
ஆளுநர் தன் கடமையில் தவறிவிட்டார் என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கும். எனினும், ஆளுநருக்கே சகல உரித்துக்களும் உண்டு என்று நீதிமன்றம் கூறுவதில் இருந்து 13வது திருத்தச்சட்டத்தின் குறைபாட்டை மக்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.
இந்த 13வது திருத்தச் சட்டத்தை ஒட்டிய அரசியல் யாப்பையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ‘புதிய யாப்பு’ என கூறுகின்றது.
ஆளுநர் அரசாங்க முகவர் முதலமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர். மக்கள் பிரதிநிதிக்கு இல்லாத உரித்து ஆளுநருக்கு உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளதை வைத்து 13வது திருத்தச் சட்டம் எவ்வளவு வலுவற்ற சட்டம் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.
இனியாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றெடுக்க முன்வருவார்களா?” என தெரிவித்துள்ளார்.