கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்காரணமாக கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகல் வெளியிட்டுள்ளன.
வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளதாகவும் இந்த காற்றழுத்தம் அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக கேரளாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், கடலிலும் பலத்த காற்று வீசும் என்றும் அலைகள் பல மீட்டர் உயரத்திற்கு எழும்பும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்றும் குறித்த நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து, பேரிடர் மேலாண்மை இயக்கத்தினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகியது. தாமதமாக ஆரம்பமாகிய தென்மேற்கு பருவமழை அதன் பிறகு எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. ஒரு மாதம் கடந்த பிறகு மீண்டும் மழை தீவிரம் அடைந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.