ஓகக்கலை
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர். ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர்.இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர். நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது. இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில் ஓகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும். இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம்.
ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
மகராசனம் (மகரம்–முதலை),
சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி),
சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ),
மச்சாசனம் ( மச்சம் – மீன் ),
கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),
புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
பாகாசனம் ( பாக – கொக்கு ),
பேகாசனம் ( பேக – தவளை ),
குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ),
சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ),
கபோடாசனம் ( கபோடா- புறா )
இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
விருட்சாசனம் ( விருட்சம் – மரம் )
பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர். அவற்றுள் சில பின்வருமாறு,
நாவாசனம் ( நாவா – படகு ),
தனுராசனம் ( தனுரா-வில் ),
ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
துலாசனம் ( துலா – தராசு )
சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
தண்டாசனம் ( தண்டா – கம்பு, தடி )
இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர். இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை.தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர். இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர். இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. அதன் பிறகு காலப்போக்கில் கடல் கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும்,
ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து சென்றது.பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் (இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு சமஸ்கிருத மொழியில் இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள்,யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன.தமிழர் வழி தோறறம் பெற்ற “ஓகக்கலை” எனும் சொல் மறைந்து சென்றது. எனவே தமிழர்க்கு உரித்தான கலைகளை பாதுகாப்பது எமது ஒவ்வரினதும் தலையாய கடமை ஆகும்.
ஓகக்கலை கல்லூரி
திருகோணமலை