எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் முற்றாக முடங்கி போயுள்ளது.
தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகிற நிலையில் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், யாழின் பிரதான சந்தைகள் எவையும் இன்று திறக்கப்படவில்லை என்பதோடு, யாழ்ப்பாணத்திற்கான பிரதான காய்கறி விநியோக சந்தைகளான மருதனார்மடம், திருநெல்வேலி சந்தைகளும் பூட்டப்பட்டுள்ளன.
மேலும் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் அரச, தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை என்பதோடு, தூர பிரதேச தனியார் பேருந்துகள் மட்டும் சேவையில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பாடசாலைகள் வழமை போன்று இயங்குவதாகவும் எனினும் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்திருந்த போதிலும், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்கள் வழமைபோன்று இயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ததமிழர் தலைநகரமாம் திருகோணமலையில் யாழ்ப்பாணத்திற்கான பேரூந்துகள் எவையும் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.