வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலயத்துக்கு வரும் பக்தர்களை சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் ஆராய்ந்தனர்.
யாழ்ப்பாணம் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அவர்களுடன் யாழ்ப்பாணம் மாநகர சபை பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அடியவர்களைச் சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பதற்கு வசதியாக யாழ்ப்பாணம் மாநகர சபையால் 3 இலட்சம் ரூபாய் செலவில் 8 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் மேலதிகமாக 4 கூடுகள் தேவை என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்திருந்தனர். இதன் காரணமாகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவ்வாறு சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.