இலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றி அமைப்பதே தமது பிரதான இலக்கென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொம்பெனித்தெரு முதல் கோட்டை வரையான பகுதியில் உள்ள வாவியில் பயணிகள் படகு சேவையை இன்று ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனை அபிவிருத்திப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தெற்கு முனையின் அபிவிருத்தியோடு இடைநிறுத்த போவதில்லை என்றும் விரைவில் வடக்கு முனை அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.
கொழும்பில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் பயணிகளின் நலன் கருதி படகுப் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, சாகல ரத்னாயக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபூர் ரஹ்மான், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.