இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏதும் இல்லையென்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக இலங்கையில் உள்ள தமது பிரஜைகளை பாதுகாப்பாக இருக்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இதுவரை எமக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை எனவும், அவ்வாறான தகவல்கள் கிடைத்தால், அது குறித்து மக்களுக்கு அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படாத வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” எனவும் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு வழமையான எச்சரிக்கையே விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.