இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு, அனைத்து அணிகளும் அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது ஓவர்களுக்கான உலகக்கிண்ண தொடருக்கு தயாராகிவிட்டது.
இதனால், இருபதுக்கு இருபது ஓவர்கள் உலகக்கிண்ண தொடருக்கு தயாராகும் வகையில், ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு, போட்டிக்கான அட்டவணையை தயார் செய்து வருகின்றன.
இந்த நிலையில், இந்திய அணி இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது ஓவர்கள் போட்டியில் விளையாட தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, இத்தொடரை பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கான பேச்சு வார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகவும், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான தொடர் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சிம்பாப்வே மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் இந்தியா வந்து விளையாடுகின்றன. தற்போது இலங்கை அணியும் இந்தியா வந்தால் போட்டி அட்டவணையை தயாரிக்க இந்தியாவுக்கு கடினமான நிலை ஏற்படும்.
ஆனால், ஒரு வாரத்திற்குள் மூன்று போட்டிகளையும் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.