வவுனியா – குருமன்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த இருவருக்கும் இன்று திருமணம் நடக்கவுள்ள நிலையிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக தெரிவக்கப்படுகிறது.
வவுனியா மணிபுரம் பகுதியைச் சேர்ந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட குறித்த இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற நிலையில், குருமன்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்தில் மணப்பெண் தலையில் பலத்த காயமடைந்துள்ளதுடன், இளைஞனும் காயமடைந்துள்ளதோடு, எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு பெண்ணும் காயங்களுக்குள்ளான நிலையில், குறித்த மூவரும் தற்போது வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நிச்சயிக்கப்பட்ட திருமணம் இன்று நடைபெறாமை, அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.