இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் குறித்து இந்திய மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை அடுத்து, பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுக் கூட்டம் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தலைமையில் இன்று (புதன்கிழமை) இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதோடு இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரை திரும்பப் பெறுவதோடு, பாகிஸ்தானிலுள்ள இந்தியத் தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடுவதாகவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு இரத்துச் செய்தது. மேலும் அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் இராணுவம் எந்த எல்லைக்கும் செல்லும் என பகிரங்க எச்சரிக்கையும் விடுத்தது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையிலேயே, இந்தியா உடனான வர்த்தக ரீதியிலான உறவை முறித்துக்கொள்ளுதல், இந்திய தூதரை திருப்பி அனுப்புதல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.