ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கா இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க இராணுவத்தினர் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தான் படையினருடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா தலைமையில் தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. எனினும், தலிபான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார்.
அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தலிபான்கள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப்படையினர் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தின் ஹஸ்டர் சந்தை பகுதியில் அமெரிக்கப் படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இந்த தாக்குதலில் அமெரிக்கப் படையினர் 8 பேர் மற்றும் ஒரு குழந்தை உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலிற்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.