உரிய அதிகாரிகள் தங்கள் பொறுப்பை உரியமுறையில் நிறைவேற்றியிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்கலாம். ஆனால் இறுதியில் என்னையும் குற்றவாளியாக்கிவிட்டனர்.
தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்பே எனக்கு இதுதொடர்பில் தெரியும் என என் மீது குற்றம்சுமத்த ஆரம்பித்தனர். அந்தளவு தங்களை பாதுகாத்துக்கொள்ளும் அதிகாரிகளே எமது நாட்டில் உள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாடு நேற்று கொழும்பு தாமரை தடாக அரங்கில் இடம்பெற்றது.
மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பயங்கரவாத தாக்குதலுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பமான சூழ்நிலையை தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சிநிரலுக்காகப் பிழையாகப் பயன்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து முற்கூட்டியே கிடைத்த தகவல்களை பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரிகள் பொறுப்புடன் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை சரியான முறையில் அறிவுத்தவில்லை அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளாமல் இருந்துவிட்டு தற்பொழுது நிரபராதிகளாவதற்கு முயற்சிக்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடைபெற்ற மூன்று மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத குழுவை முற்றாக ஒழிக்க முடிந்தது. எந்தவொரு நாடும் இவ்வளவு விரைவாக பயங்கரவாத தாக்குதலை தடுத்திருக்கவில்லை. எனது ஆலோசனையின் பிரகாரம் முப்படைகள் பொலிஸாருடன் நாள்தோறும் செயற்பட்டு இதனை மேற்கொண்டனர் என்றார்.