தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி கருணாநிதி மற்றும் கே. நவாஸ் கனி ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த துடன், இலங்கை – இந்திய மீனவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
கொழும்பிலுள்ள விவசாயத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் கடற்றொழில் மற்று நீரியல்வள ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி, இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி, அலிசாஹிர் மௌலானா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்தியுள்ள போதிலும், சில சந்தர்ப்பங்களில் சில அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறுவதாகத் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்” என கூறியிருந்தார்.
கனிமொழியினால் முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டை இலங்கை அதிகாரிகள் மறுத்திருந்ததுடன், அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது எனவும் உறுதியளித்தனர்.
இந்திய மீனவர்களோ அல்லது இலங்கை மீனவர்களோ திட்டமிட்டு கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என இரண்டு தரப்பினரும் கூறியிருந்தனர்.
இந்த சந்திப்பு நிறைவு பெற்றதன் பின்னர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டமை குறிப்பிடத்தக்கது.
