ஜனாதிபதி தலைமையில் வாரந்தோறும் இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தின் நேரத்தை மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் அடுத்த வாரம் முதல் 8.30 மணிக்கு இந்த வாராந்த கூட்டம் இடம்பெறும் என தெரிவிக்பபடுகிறது.
அமைச்சரவைக் கூட்டத்தை காலை 7.30 மணிக்கு நடத்துவதற்கு ஜனாதிபதி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீர்மானம் எடுத்திருந்தார். இந்த தீர்மானத்தின் பின்னர் நடைபெற்ற கூட்டங்களுக்கு குறிப்பிட்ட ஒரு சிலரே நேரத்துக்கு வருகை தந்திருந்ததாகவும், பெரும்பாலானவர்கள் தாமதமாகியே வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு நடைபெற்ற கூட்டத்துக்கும் அமைச்சர்கள் பலரும் தாமதமாகியே சமூகமளித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
ஏற்கனவே, அமைச்சரவைக் கூட்டம் பிரதி செவ்வாய்க்கிழமையும் 9.30 மணிக்கு தொடராக நடைபெற்று வந்தது. இதனையே 7.30 மணிக்கு மாற்றிதனால் இந்த வரவு தாமதப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே இக்கூட்டம் அடுத்த வாரம் முதல் 8.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.